குழந்தை யாருக்கு?

விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
12/20/2011 தினகரன்

புதுடெல்லி : விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளின் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விவகாரத்து பெற்ற தம்பதிகள், அவர்களின் குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி ஏராளமான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இது போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம், சலேமேஸ்வர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

17 வயது, 11 வயது மகள்களை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க பிரிந்து சென்ற பெற்றோர் உரிமை கோரினர். பிள்ளைகள் இருவரின் விருப்பத்தை நீதிபதிகள் நேரில் கேட்டனர். தந்தையிடம் வளர விரும்புவதாக இருவரும் கூறினர். இதையடுத்து தந்தையிடம் பிள்ளைகள் வளர உத்தரவிட்ட நீதிபதிகள், வார இறுதி நாட்கள் தாய் தனது மகள்களை சந்தித்து பேசலாம் என உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து குழந்தைகளின் விருப்பத்தை கேட்டதில், தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் தொடர்ந்து வளர்ந்தால் சிறந்தது என முடிவு செய்தோம். தற்போது தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை இடையூறு செய்வது நல்லதல்ல என கருதுகிறோம். தாய்க்கும் குழந்தைகளை பார்க்கும் உரிமை வழங்குவதன் மூலம் நீதி வழங்கப்பட்டதாக உணர்கிறோம்.

பிரிந்து சென்ற பெற்றோர் தொடுக்கும் வழக்குகளில் அவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குழந்தைகளின் நலன் மற்றும் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம் 1890, இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956 ஆகியவற்றிலும், குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றனர்.

No comments: